காலம் ஓடிக்கொண்டிருக்கிறது
நியாயத்தீர்ப்பும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சாட்சிகளாக பினந்தின்னிக் கழுகுகள்,ஓநாய்கள்
மற்றும் சில சிப்பாய்கள்.
இறுதி யுத்தம் என்று பெயர் சூட்டப்பட்ட பொருந்தாப் போரில்
முள்ளிவாய்க்காலிலும்,நந்திகடலிலும்,பதுங்கு குழிகளிலும்
கொத்துக்குண்டுகளால் வீழ்த்தி வீசப்பட்ட பல்லாயிரம் பேரும்
நீதிமன்றக் கூடத்தில்.
அவர்களின் பலத்த சிரிப்பொலி குற்றவாளிகளை
அதிரச்செய்கிறது.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகை உடைத்தாலே
இப்பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றலின் ஒரு இழை
அறுந்துபடுவதாக கூறுவோர்
இப்போது என்ன கூறுவர்?
தனது கற்பை இழந்து போய்விட்ட நீதிமன்றம்
மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
குற்றவாளிக் கூண்டில் அதிபரும் தம்பிகளும் நண்பர்களும்
எக்காளச்சிரிப்பை உதிர்க்கும் போது ஒரு பெண் கேட்டாள்
'பாரதப்போரின் கடைசியில் துரியோதனனை மட்டும்
பாண்டவர்கள் கொல்லவில்லை,ஏன் தெரியுமா?'
'தெரியாது'
'எப்படி இறந்துபோனான் தெரியுமா?'
'தெரியாது'
'பாண்டவர்கள் தனக்கு உயிர்ப் பிச்சை அளித்த
கேவலத்தினால் தற்கொலை செய்துகொண்டான்'
தனக்கு ஏதேனும் தண்டனை தரப்படவேண்டும்
அதன் மூலம் தன் பாவங்கள் நீக்கப்படவேண்டும் என
அதிபரும் சுற்றமும் விரும்புகின்றனர்.
அதிபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு தருகிறது.
நீதிமன்றத்தின் நிர்வாணம் குறித்து நந்திக்கடல் சிரிக்கிறது.
முள்ளிவாய்க்கால் சாம்பல் தேடிச் சென்ற அதிபர் அங்கு
இருந்த சாம்பல்,எலும்பு மேட்டை அண்ணாந்து பார்க்க
தானும் ஒரு இறந்த பிணம்தான் என்பது நினைவுவர
சாம்பல்மேடு பிளவுற்று என்றென்றும் தீராத புதைகுழிக்குள்
சென்றுகொண்டிருந்தனர் அதிபரும் அவரது சுற்றமும்.
No comments:
Post a Comment