Saturday 17 December 2011

முல்லைப் பெரியாறு

                     
   முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழ்நாட்டில் அறச்சிக்கலை உருவாக்கியுள்ளது.எல்லைப்புற மக்களின் தன்னெழுச்சி மிக்கப் போராட்டங்களை இருவிதமாக அணுகலாம்.தமிழ்நாட்டின் மீதானப் பற்று என்பது ஒரு கோணம்.தமிழரல்லாதவர்களின் மீதான வெறுப்பின்  விளைவு என்பது மறுகோணம்.முதல்கோணம்தான் நமக்கு எப்போதும் வேண்டும்.தமிழ்நாட்டின் மீது அளப்பரிய பற்று வேண்டும்.தமிழ்நாடு என்றால் அதன் மக்களும்,மொழியும்,பண்பாடும்தானே!சாதி மத வேறுபாடிகளின்றி அதன் மக்களை நேசிக்கவேண்டும்.மொழியும்,பண்பாடும் மிகமிக முக்கியம்.எல்லைப் புறத்தில் தமிழகமக்களின் வீறுகொண்ட தொடர்ச்சியானப் போராட்டங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.இன உணர்வும்,மொழி உணர்வும்,மாநில உணர்வும் நமக்கு மிக மிக அவசியம்.இந்த எழுச்சியில் நூறில் ஒரு பங்கு  இருந்திருந்தால்கூட இலங்கையில் நம் இனம் காப்பாற்றப்பட்டிருக்கும்.ராஜிவ் காந்தி படுகொலை காரணமாகத்தான் இலங்கைப் படுகொலைகளின்போது இந்தியா மௌனமாக இருந்தது எனக் கூறுபவர்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ராஜிவ்காந்தி படுகொலை என்ற ஒரு வரலாற்றுத் துன்பத்தை ஈழப்படுகொலை என்ற ம‌ற்றொரு துன்பியலால் துடைத்துவிட முடியுமா?அப்படித்தான் துடைத்திட முடிவெடுத்தது இந்திய அரசு.அதன் கூட்டணிக் கட்சிகளும்,ராணுவமும் துணை போயின.இரண்டாம் உலகப்போரை அணுகுண்டு போட்டு நிறைவு செய்த அமெரிக்கச் செயலை ஒத்தது இது.தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். பெரியாறு அணைப்பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயப்பாட்டை ஓங்கி நிலைநிறுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் சில இழிவானக் காரியங்களையும் செய்யத் துணிந்துவிட்டோம்.
   பெரியாறு அணை எக்கேடு கெட்டால் என்ன‌?ஆலுக்காசை உடைப்போம்.நாய‌ர் டீக்க‌டையை அடித்து நொறுக்குவோம் என்கிற‌ ரீதியில் தர‌ம் தாழ்ந்துப் போய்விட்டோம்.க‌ட‌ப்பாரை,ம‌ண்வெட்டிக‌ளோடு பெரியாறு அணையை உடைக்க‌ச் சென்ற‌ கேர‌ள‌க் க‌ட்சிக்கார‌ர்க‌ளுக்கும்,ந‌ம‌க்கும் என்ன‌ வேறுபாடு?முல்லைப் பெரியாறு பிர‌ச்சினை என்ப‌து ஒரு க‌ட்சித் த‌லைவ‌ர் சொன்ன‌து போல‌ மிக‌ச் சிறிய‌ப் பிர‌ச்சினை அல்ல‌.இத்த‌கைய‌த் த‌லைவ‌ர்க‌ளை வைத்துக் கொண்டுதான் ந‌ம் எதிர்கால‌த்தோடு நாம் சூதாடிக்கொண்டிருக்கிறோம்.மிக‌வும் ஆழ‌மானப் பிர‌ச்சினை அது.நீதிம‌ன்ற‌த்தின் வாச‌லில் இப்பிர‌ச்சினை உள்ள‌தால் நாம் அனைவ‌ரும் நீதிக்குத் த‌லைவ‌ண‌ங்க‌வேண்டும்.136 அடி வ‌ரை நீர் தேக்கிக்கொள்ள‌லாம்,142 அடியாக‌ உய‌ர்த்த‌ப்ப‌ட‌வும் மாட்டாது,120 அடியாக‌க் குறைக்க‌ப்ப‌ட‌வும் மாட்டாது என்று உச்ச‌நீதிம‌ன்ற‌ம் ப‌திவு செய்துள்ள‌து.ம‌த்திய‌ப் ப‌டைக‌ளின் பாதுகாப்பை உச்ச‌நீதிம‌ன்ற‌ம் ஏற்றுக்கொள்ள‌வில்லை.இந்த‌ ஒரு விஷ‌ய‌ம் ம‌ட்டும்தான் ந‌ம‌க்கு நெருட‌லாக‌ உள்ள‌து.ஏனென்றால் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் பார‌திய‌ஜ‌ன‌தாக் க‌ட்சியைச் சார்ந்த‌ சில‌ர் க‌ட‌ப்பாரைக‌ளோடு அணையைத் தாக்க‌ முய‌ற்சி செய்த‌துதான் ந‌ம‌க்கு பீதியைக் கிள‌ப்பியுள்ள‌து. ஏனென்றால் அவ‌ர்க‌ள் கையில் எடுத்தால் எதையாவ‌து இடிக்காம‌ல் விட‌மாட்டார்க‌ள்.என‌வே அணைக்கு ம‌த்திய‌ப் பாதுகாப்புப் ப‌டைக‌ளை உட‌னே அனுப்பிவைக்க‌வேண்டும்.இந்தியாவின் நதிக‌ள் ம‌ற்றும் அணைக‌ள் அனைத்தையும் ராணுவ‌த்தின் க‌ட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவ‌ர‌வேண்டும் என‌ க‌லாமும் ச‌ரியாக‌ச் சொல்லியுள்ளார்.கூட‌ங்குள‌த்தின் பிதாம‌க‌ர் க‌லாமின் அணை(அணு உலை அல்ல‌)குறித்த‌ வார்த்தைக‌ளை ம‌த்திய அர‌சு செவிம‌டுக்க‌வேண்டும். அதன் கூட்ட‌ணிக் க‌ட்சிக‌ள் நிர்ப்ப‌ந்த‌ம் த‌ர‌வேண்டும்.அப்ப‌டியும் முடிய‌வில்லையென்றால் கூட்ட‌ணியைவிட்டு,ஆட்சியை விட்டு வெளியேற‌வேண்டும்.(த‌ங்க‌ள‌து சுய‌ம‌ரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள‌ அவர்க‌ளுக்கு நிறைய‌ வாய்ப்புக‌ளை த‌‌மிழ‌ர்க‌ள் த‌ந்துவிட்டார்க‌ள்.அவ‌ர்க‌ள் அசைவ‌தாக‌ இல்லை).பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌னுக்கு அணையைப் ப‌ற்றிய‌ எந்த‌க் க‌வ‌லையுமில்லை.அணு உலை ப‌ற்றிய‌க் க‌வ‌லைதான்.சில‌ ம‌திப்பீடுக‌ள் குறித்த‌க் க‌வ‌லைக‌ள் பிர‌த‌ம‌ருக்கு இல்லாம‌லிருக்க‌லாம்.ஆனால் நாமும் அம்ம‌திப்பீடுக‌ளை காற்றில் ப‌ற‌க்க‌விட்டு விட‌க்கூடாது.ச‌மாதான‌மும்,அமைதியும் சில‌ருக்கு அருவ‌ருப்பான‌ச் சொற்க‌ளாக‌ இருக்க‌லாம்.ஆனால் ந‌ம‌து போராட்ட‌ம் மீண்டும் உத்வேக‌ம் பெற‌ ச‌மாதான‌மும்,அமைதியும் க‌ண்டிப்பாக‌ வேண்டும்.த‌மிழ‌ர்க‌ள் என்ப‌த‌ற்காக‌ விர‌ட்டிய‌டிப்ப‌தும்,ம‌லையாளிக‌ள் என்ப‌த‌ற்காகக் க‌டைக‌ளை உடைப்ப‌தும் பாசிச‌ம் அல்லாம‌ல் வேறென்ன‌?
                                                           ---------------------------



Thursday 8 December 2011

யார் வன்முறையாளர்கள்?!

           

  
      முன்னெப்போதும் இல்லாத அளவு ஒரு கடுமையான அடையாளச் சிக்கலுக்குள் சிக்கித்தவிக்கிறது தமிழகம்.பல தளங்களில் தனது எதிர்காலத்தைக் குறித்தப் புதிரில் தன்னை மறைத்துக்கொண்டுக் கிடக்கிறது அது.சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரணதண்டனைக்கு எதிராக மிகப்பெரும் கருணைப் பிரவாகம் பொங்கி வழிந்த தமிழகத்தில் அப்பாவி தலித்துகள் ஏழு பேர் படுபயங்கரமான முறையில் அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.கூடங்குளம் அணுமின் உலைகள் மிகப் பரந்த விவாதத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.'கலாமே சொல்லிட்டாருல்ல,இன்னும் என்ன போராட்டம் வேண்டிக்கிடக்கு' என்ற பொதுப்புத்தி தமிழக மக்களின் மீது கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசால்,காங்கிரஸ் கட்சியால்,அணுமின் விஞ்ஞானிகளால் திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.மக்களின் திரளான போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது.போராட்டத்திற்குப் பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய அரசு ஆராயும் என்று அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்.அணு உலைகள் வாங்கும்போதும்,அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும்போதும் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு ரட்சகர்களாக மாறிப்போவார்கள்.ஆனால் தங்களின் நிலமும்,வாழ்வும்,வாழ்வாதாரமும் போய்விடுமோ என பயந்து போராடும் மக்கள் அந்நிய நாட்டிலிருந்து பணம் பெறும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாக அமைச்சருக்குத் தெரிகிறது.தூக்குதண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்ற விஷயத்தில் தமிழ்த் தேசியர்களின் போராட்டத்தை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்,தமிழ்த்தேசியர்களோடு நாம் முரண்படும் புள்ளிகள் பல இருந்தாலும் கூட.தூக்குதண்டனைப் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்த கோபம்,பரமக்குடி சம்பவத்திற்குப் பின்னர் இன்னும் பல மடங்கு பல்கிப் பெருகியிருக்கவேண்டும்.ஆனால் தலித் அமைப்புகள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,மனிதஉரிமைவாதிகள் ப‌ர‌மக்குடிக்கு சென்று வ‌ந்த‌தோடு ச‌ரி.அவ‌ர்க‌ளின் விசார‌ணைக‌ளோடு ச‌ரி.த‌மிழ்நாட்டின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளிலும் ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளோடு ச‌ரி.துப்பாக்கிச்சூட்டிற்குக் கார‌ண‌மான‌வ‌ர்க‌ள் மீதான‌ விசார‌ணை இன்ன‌மும் தொட‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.ந‌ஷ்டஈட்டுத்தொகை உய‌ர்த்த‌ப்ப‌ட‌வில்லை.

      1843-ம் ஆண்டு ஆங்கிலேய‌ ஆட்சி இந்தியாவில் அடிமைமுறையை ஒழித்த‌தாக‌ வ‌ர‌லாறு பேசும்.ஆனால் இன்றைக்கு ப‌ர‌ம‌க்குடி ச‌ம்ப‌வ‌ம், அடிமை முறையைவிட‌ மிக‌க்கொடூர‌மான‌தாக‌ த‌ன்னை வெளிப்ப‌டுத்திக்கொள்ளும் தீண்டாமையை மீண்டும் ஒருமுறை வெளிச்ச‌ம் போட்டுக்காண்பித்திருக்கிற‌து.மேலை நாடுக‌ளில் அடிமைமுறை இருந்த‌போது அடிமைக‌ளிட‌ம் ஆளுமை இருந்த‌து.ஒப்ப‌ந்த‌ ஷர‌த்துக‌ளில் ம‌ட்டும்தான் அவன் அடிமை.த‌ன்னை ஆளும் உரிமையாள‌னின் முன் ந‌ட‌க்க‌வோ,பேச‌வோ,சாப்பிட‌வோ முழு உரிமை அவ‌னுக்கு உண்டு.இன்னும் சொல்ல‌ப்போனால் அவ‌ர்க‌ளுக்கிடையே திரும‌ண உற‌வும் கூட‌ உண்டு.அடிமைக‌ளுக்கு பொருளாதார‌ ம‌திப்பு இருந்த‌ கார‌ண‌த்தினால் அவன‌து உட‌ல் ந‌ல‌த்தில் கூட‌ உரிமையாள‌ன் பெரும் அக்க‌றை காட்டினான்.ஆனால் இன்றைக்கும் இந்திய‌ சாதி அமைப்பு தீண்ட‌த்த‌காத‌ ம‌க்க‌ளை த‌ன‌து காலில் போட்டு துவ‌ம்ச‌ம் செய்கிற‌து.அத‌ன் ஆதிக்க‌ ச‌க்திக‌ளும்,அடிவ‌ருடிக‌ளும் துப்பாக்கியால் பேசுகிறார்க‌ள்.

      பிர‌ச்சினை தேவ‌ரின் குருபூஜையோ,இம்மானுவேல் சேக‌ர‌னின் குருபூஜையோ அல்ல‌.இர‌ண்டு விழாக்க‌ளையும் அர‌சு இருவேறு க‌ண் கொண்டு பார்ப்ப‌துதான் பிர‌ச்சினையின் மூல‌கார‌ண‌ம்.தொட‌ரும் சாதிய‌ மோத‌ல்க‌ளுக்கு முத்துராம‌லிங்க‌த்தேவ‌ரோ,இம்மானுவேல் சேக‌ர‌னோ  காரணம் அல்ல‌.த‌ங்க‌ள் சாதி ம‌க்க‌ள் ம‌ட்டும்தான் இப்பூமியில்  வாழ‌வேண்டும் என‌ க‌ன‌வில்கூட‌ அவர்கள் நினைத்திருக்க‌மாட்டார்க‌ள்.அவ‌ர்க‌ள் அடிப்ப‌டையில் ந‌ல்லிண‌க்க‌வாதிக‌ள்.த‌ங்க‌ள் சாதி ம‌க்க‌ளின் ஏழ்மைநிலையைப்போக்க‌வும்,ச‌மூக‌த்தில் சிற‌ந்த‌ப் பொருளாதார‌நிலையை  அடைந்திட‌வும் அவ‌ர்க‌ள் விரும்பினார்க‌ள்.ஒருவ‌ரை ம‌ற்றொருவ‌ர் அழித்துதான் அந்நிலை எய்த‌ப்ப‌ட‌வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் எண்ண‌வில்லை.இருவ‌ருமே இரு தேசிய‌க்க‌ட்சிக‌ளோடு த‌ங்க‌ளை ஐக்கிய‌ப்ப‌டுத்திக்கொண்டார்க‌ள்.

      ப‌ர‌ம‌க்குடியிலும் ச‌ரி,த‌மிழ்நாட்டிலும் ச‌ரி அல்ல‌து இந்தியாவிலும் ச‌ரி சாதிய‌ அடிமைத்த‌ன‌ம் என்ப‌து இந்துக்க‌ளின் ஒரு ப‌ழ‌மையான‌ ச‌மூக‌முறை.இந்துக்க‌ளுக்கு இச்ச‌ட்ட‌த்தை கைய‌ளித்த‌ ம‌னுவும் இந்த‌ அடிமைத்த‌ன‌த்தை அங்கீக‌ரித்துள்ளார்."தீண்ட‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌னைச் ச‌ட்ட‌ம் ஒரு ந‌ப‌ராக‌ அங்கீக‌ரித்திருந்த‌போதிலும் அவ‌னுக்கு எந்த‌வித‌ ந‌ன்மையையும் செய்ய‌த்த‌வ‌றிவிட்ட‌து.ஏனெனில் இந்து ச‌மூக‌ம் அவ‌னை அங்கீக‌ரிக்க‌க்கூடாது என்ப‌தில் தீர்மான‌மாக‌ இருந்த‌து.ச‌ட்ட‌த்தின் ஆதிக்க‌ம் எப்ப‌டி இருப்பினும் ஓர் அடிமைக்கு ஆளுமை இருந்த‌து.ஆனால் ச‌ட்ட‌த்தின் ஆத‌ர‌வு இருந்தும் தீண்ட‌ப்ப‌டாத‌வ‌னுக்கு ஆளுமையில்லை.இந்த‌ வேறுபாடு அடிப்ப‌டையான‌து.ச‌ட்ட‌த்த‌ளைக‌ளினால் பிணைக்க‌ப்ப‌ட்டு இருந்தாலும் அடிமையின் ச‌மூக‌ ரீதியான‌ உய‌ர்வும்,ச‌ட்ட‌ரீதியாக‌ சுத‌ந்திர‌ம் அளிக்க‌ப்ப‌ட்டாலும் தீண்ட‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளின் ச‌மூக‌த்தாழ்வு நிலையும் இந்த‌ முர‌ண்பாட்டை விள‌க்க‌முடியும்.ச‌ட்ட‌த்தால் உத்த‌ர‌வாத‌ம‌ளிக்க‌ப்ப‌டும் உரிமைக‌ளைவிட‌ பெரும்பாலும் வெளிவாழ்க்கையில் காண‌ப்ப‌டும் ச‌ம‌த்துவ‌மே ஒரு ம‌னித‌னுக்கு முக்கிய‌மாக‌த் தோன்றுகிற‌து"(அம்பேத்க‌ர் நூல் தொகுப்பு:தொகுதி-25).

        மிக‌ச்சிற‌ந்த‌ ச‌ட்ட‌ம் ந‌ம்முடைய‌து.மாமேதை அம்பேத்க‌ர்தான் அதை வ‌டிவ‌மைத்தார்.சாதிகொடுமையை ச‌ட்ட‌ம் ம‌ட்டுமே ஒழித்துவிடும் என்ப‌தை அம்பேத்க‌ர் ந‌ம்ப‌வில்லை.தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் தொட‌ர்ச்சியானப் போராட்ட‌ங்க‌ளும்,ம‌த‌மாற்றங்க‌ளுமே ச‌ரியான‌ தீர்வுக‌ளாக‌ அம்பேத்க‌ரால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.சில‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் சொல்வ‌தைப்போல‌ ப‌ல‌நூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் நாடாண்ட‌ ப‌ர‌ம்ப‌ரை ம‌ன்ன‌ர்க‌ளாக‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் திக‌ழ்ந்திருந்தாலும் வ‌ர‌லாறு வ‌ர‌லாறாக‌வே இருக்க‌ட்டும்.யாரும் யாரையும் ஆள‌வேண்டாம்.ஆள‌ப்ப‌ட‌வும் வேண்டாம்.தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் எதிர்கால‌ ல‌ட்சிய‌ம் தாங்க‌ள் இழ‌ந்த‌ க‌ல்வியை,வாழ்க்கையை,சுய‌ம‌ரியாதையைத் திரும்ப‌ப் பெறுவ‌துதான்.

     தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அர‌சிய‌ல்,ச‌மூக‌வ‌ழித்திர‌ட்ட‌ல்க‌ளை சாதி இந்துக்க‌ளும் ச‌ரி,அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் ச‌ரி கிஞ்சித்தும் விரும்ப‌வில்லை.‌தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அணிதிர‌ட்ட‌லே இந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் கேள்விக்குறியாகியுள்ள‌து.ப‌ண்ணை அடிமை முறைக்கு எதிராக‌,பொருளாதார‌,ச‌மூக‌ அடிமைத்த‌ன‌த்திற்கு எதிராக‌,தீண்டாமைக்கு எதிராக‌ கீழ‌த்த‌ஞ்சை தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் கிள‌ர்ந்தெழுந்த‌போது அவ‌ர்க‌ளுக்குக் கிடைத்த‌து ராமையாவின் குடிசை.கூலி உய‌ர்வு கேட்டு மாஞ்சோலைத் தோட்ட‌த்தொழிலாளர்க‌ளின்(இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள்)எழுச்சிக்குக் கிடைத்த‌து தாமிர‌ப‌ர‌ணி ஆற்றுக்க‌ரையோர‌த்தில் அர‌சுப்ப‌டைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌ச்சைக்கொலைக‌ளின் ச‌ட‌லங்க‌ள்.த‌ற்போது இம்மானுவேலின் 54-வ‌து நினைவேந்த‌லையொட்டி அம்ம‌க்க‌ளின் அணிதிர‌ட்ட‌ல் காவ‌ல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.முத்துராம‌லிங்க‌த்தேவ‌ரின் குருபூஜையைப் போன்றே இம்மானுவேல் சேக‌ர‌னின் குருபூஜையும் அர‌சு விழாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ற‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ள் துப்பாக்கிச்சூட்டின் மூல‌ம் அர‌சால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இந்த‌ மூன்று ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌,இதுவ‌ரை த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்துள்ள‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கெதிரான‌ அனைத்து வ‌ன்கொடுமைக‌ளிலும் சாதி இந்துக்க‌ளுக்கும்,ஆதிக்க‌வாதிக‌ளுக்கும் ஆத‌ர‌வாக‌த்தான் போலீசார் நிலை எடுத்துள்ள‌தை நாம் ச‌ற்றும் ம‌றுக்க‌முடியாது.அர‌சைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றாக‌த்தான் இருக்க‌முடியும்.'விடுத‌லை அடைந்து 65 ஆண்டுக‌ள் ஆன‌பின்பும் போலீஸ் ப‌டை ம‌ட்டும் இன்ன‌மும் ஜ‌ன‌நாய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌முடியாம‌ல் இருப்ப‌து எத‌னால்?

     த‌மிழ்நாட்டின் ஒவ்வொரு சாதிக்கும் நீண்டநெடிய‌ வ‌ர‌லாறு உண்டு.சாதிக்க‌ல‌வ‌ர‌ங்க‌ளை‌ அவ்வ‌ர‌லாற்றின் பின்ன‌ணியில் பார்க்க‌வேண்டும்.ப‌ள்ள‌ர் என்ப‌து ம‌ள்ள‌ர் என்ப‌த‌ன் திரிபு என தேவேந்திர‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.மள்ள‌ர் என்றால் ப‌ழ‌ந்த‌மிழ்நாட்டின் வேளாண்தொழில் செய்த‌வ‌ர்க‌ளின் த‌லைவ‌ன் என்று பொருள்.அவ‌ன் தேவேந்திர‌ன் என‌வும் இந்திர‌ன் என‌வும் அழைக்க‌ப்ப‌ட்டான். ப‌ழ‌ந்த‌மிழ்நாட்டின் வேளாண்மை நில‌ங்க‌ள் முழுவ‌தையும் அர‌சாண்ட‌ தேவேந்திர‌ர்க‌ள் த‌ங்க‌ள் நில‌ங்க‌ளை இழ‌ந்து விவ‌சாய‌க்கூலிக‌ளாக‌,தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளாக‌ உருமாறிவிட்ட‌ வ‌ர‌லாற்று அவ‌ல‌த்தை எண்ணிப்பார்த்து ச‌முதாய‌த்தில் எங்க‌ளுக்கும் ச‌ரிநிக‌ர் ச‌ம‌மாக‌ ஆளுமை வேண்டும் என்ற‌ எழுச்சியுட‌ன் போராடுகிறார்க‌ள்.

       1930-க‌ளில் ஒன்றுப‌ட்ட‌ ராம‌நாத‌புர‌ மாவ‌ட்ட‌ சாதி இந்துக்க‌ள் தேவேந்திர‌ர்க‌ளுக்கு இழைத்த‌ சாதிக்கொடுமைக‌ள் ப‌ற்றி சொல்லிமாளாது.தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இன‌ப்பெண்க‌ள் த‌ங்க‌ம் ம‌ற்றும் வெள்ளியாலான‌ ந‌கைக‌ளை அணிய‌க்கூடாது,ச‌ந்த‌ன‌ம் பூச‌க்கூடாது,பூக்க‌ளை சூட‌க்கூடாது,உட‌லின் மேற்ப‌குதியை ம‌றைக்க‌க்கூடாது.தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இன‌ ஆண்க‌ள் முழ‌ங்காலுக்குக்கீழும்,இடுப்புக்கு மேலும் உடுத்த‌க்கூடாது.குடை கொண்டுசெல்ல‌க்கூடாது.ச‌மைப்ப‌த‌ற்கு ம‌ண்பாண்ட‌ங்க‌ளை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் என‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கான‌ க‌ட்ட‌ளைக‌ள் சாதி இந்துக்க‌ளால் பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்ட‌து.அமுல்ப‌டுத்த‌வும்ப‌ட்ட‌து.தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ப் போராட்ட‌ங்க‌ள்தான் அவ‌ர்க‌ள‌து தாழ்வைப் பெரும‌ள‌வு போக்கின‌.ஆனால் தேவேந்திர‌ர்க‌ளின் ப‌ழ‌ங்கால‌ வ‌ர‌லாற்றுச்சுவ‌டுக‌ள்தான் பிற‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின்மீது அவர்க‌ள் கொண்டிருக்கும் காழ்ப்பையும்,க‌டைபிடிக்கும் வெறுப்பையும் நிர்ண‌யிக்கிற‌து.
1999 ம‌ற்றும் 2000-ல் சிறீவில்லிப்புத்தூர்,வி.புதுப்ப‌ட்டியில் தேவேந்திர‌குல‌ வேளாள‌ர்க‌ளுக்கும்,ப‌றைய‌ர் இன‌ ம‌க்க‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தில் இரு த‌ர‌ப்பிலும் 11 பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை என்ன‌வென்று சொல்ல‌?
     மறவர்களும்,அகமுடையார்களும்,கள்ளர்களும் ஒன்றிணைக்கப்பட்டு தேவர் இனமாக அரசால் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பள்ளர்,குறும்பர்,பள்ளாடி,தேவேந்திரர்,பாதிரியார் உள்ளிட்ட ஏழு சாதியினரைச் சேர்த்து தேவேந்திரகுல சமுதாயம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று கிருஷ்ணசாமி இப்போது கேட்கிறார்.தமிழ்நாட்டின் அனைத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக தமிழகஅரசு அறிவிக்கவேண்டும் என்ற பரந்த கனவை அவர் எப்போது நனவாக்கப்போகிறார்?ஒரே சமுதாயமாக தாழ்த்தப்பட்டவர்கள் திரளும்போது சமுதாய மறுமலர்ச்சி விரைவுபடும்.சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இழிவுகளை இன்னும் பலத்தோடு எதிர்கொள்ளமுடியும்.பிளவுபடுத்தும் சக்திகள் ஓரங்கட்டப்படும்.கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் மேலும்,மேலும் முன்னேறுவார்கள்.இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் அவர்களுக்குக் கிட்டும்.ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால்தான் தீண்டாமை தொடர்வதற்கான மூலக்காரணிகளை அரசு விட்டு வைத்திருக்கிறது.பலியானவர்களுக்கு பணம் மட்டும்தான் என்பதை தனது கொள்கையாக அரசு கொண்டிருக்கிறது.பரமக்குடி விவகாரத்திலோ இன்னமும் கொடுமை!இந்தா ஒரு லட்சம்! வாயைப் பொத்திக்கொள்!

    கருத்தியல் தளத்தில் தங்களது மேலாதிக்கத்தை தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிப்பதில் தோல்வியடைந்து போயுள்ள சாதி இந்துக்கள் வன்முறையை எளிதில் நாடுகின்றனர்.அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி இந்துக்களில் விளிம்பு நிலையில் உள்ள சாதிகள்தான் தாழ்த்தப்பட்ட இனத்து மக்களோடு மோதலில் இறங்குகின்றனர்(Journal of Indian School of Political Economy,vol 12,No.3 & 4) என்ற ஆய்வு முடிவுகளை வன்முறையிலீடுபடும் சாதி இந்துக்கள் படிக்கவேண்டும்.ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளிலிருந்து அவர்கள் தாங்களாகவேதான் வெளியே வந்திருக்கிறார்கள்.அரசின் வன்கொடுமை எதிர்ப்புச் சட்டங்கள் எதுவும் அவர்களுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை.(1997-ம் ஆண்டில் 118 கிராமங்கள் தீண்டாமைக் கொடுமைக்கு இலக்காகும் பகுதிகள் என அரசாங்கம் அறிவித்தும்,1992 முதல் 1997 வரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் 1500 வழக்குகள் பதியப்பட்டாலும் 4 வழக்கில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள், Human Rights Watch,1997).சாதி இந்துக்களால் வன்முறைக்கு இலக்காகும் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும்,பொருளாதாரத்திலும் கூட சிறந்து விளங்குகின்றனர்.1989 போடி கலவரங்களின்போது சாதி இந்துக்களின் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? "அரசு எல்லாத் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்குகிறது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு சாதி இந்துக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களை அரசு செல்லங்கொடுத்து,சீராட்டி வளர்க்கிறது".செல்லங்கொடுத்து சீராட்டி வளர்த்த மக்களை இப்படி யாராவது சுட்டுப் பொசுக்குவார்களா?தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசு கொடுத்த சலுகை அல்ல.அதுதான் உண்மையான மறுபங்கீடு.பலநூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு வந்துள்ள மக்களுக்கான ஒளிக்கீற்று இடஒதுக்கீட்டின் மூலமாகத்தான் புலப்பட்டது.ஆனால் அதற்கும் மேலாக அரசு செய்யவேண்டியது ஒன்று உண்டு.நிலமில்லா தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுப்பது.நிலச்சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்துவது.தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களோடு சுயமரியாதையையும் சேர்த்தே பெறுவார்கள்.அதன்பிறகு கூலிகளாக,அடிமைகளாக சாதி இந்துக்களிடம் கைகட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.அம்பேத்கர் கூறியது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக ஆளுமை தரப்படவேண்டும்.சட்டப்புத்தகத்தில் மட்டுமே அது இருக்கும்,புறத்தே அவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்களானால்,தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மீனாட்சிபுரங்களுக்குள் ரஹ்மத் நகர்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

    தேசியத்தலைவர்கள் சாதித்தலைவர்களாகக் கருதப்படும் போக்கை தமிழகத்தின் சாபக்கேடாகத்தான் கொள்ளவேண்டும்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை ஒரு சாதிக்கு மட்டும் தலைவராக்கியது போலத்தான் காமராசரையும,வ.உ.சி-யையும் குறிப்பிட்ட சாதிகளின் தலைவர்களாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற தலைவருக்கு,ஆளுமைக்கு அரசு பல மரியாதைகளைச் செய்துள்ளது.1993-ம் ஆண்டு முதல் தேவர் குருபூஜையை அரசு விழாவாக்கியது.சென்னையில் தேவர் சிலை திறக்கப்பட்டது.சென்னையின் முக்கிய சாலை ஒன்றுக்கு தேவரின் பெயர் இடப்பட்டது.முத்துராமலிங்கத்தேவர் டிரஸ்ட்டை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்தது.தேவரைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மையத்தை ஏற்படுத்தியது.கள்ளர்,அகமுடையார்,மறவர் மக்களை இணைத்து தேவர் இனம் என்ற ஒன்றை அரசே ஏற்படுத்தியது.தேவர் வாழ்ந்த வீட்டை அரசு செலவில் மியூசியமாக மாற்றியது.இப்படிப்பட்ட அரசின் எல்லா முடிவுகளையும் மக்கள் வரவேற்றனர்.முக்கியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அறிவிப்புகளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவித்தது கிடையாது.ஆனால் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகத்தை 1997,மே-1 அன்று அரசு தொடங்கியபோது சாதி இந்துக்கள் வன்முறை மூலம் தெரிவித்த எதிர்ப்பை என்னவென்று சொல்ல?! தேவர் பெயரை எடுத்தாலும் பரவாயில்லை,சுந்தரலிங்கன் பெயரை வைக்கக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? 'காவல்துறை தரும் பாதுகாப்பு,அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை,முற்போக்கு அரசியலுக்குள் தப்பித்தவறிக்கூட தமது மக்கள் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தலைவர்கள்-இவை அனைத்தும் சேர்ந்தே தலித் விரோத அரசியலை சாத்தியப்படுத்தியுள்ளன'(வ.கீதா).

     வெண்மணிப்படுகொலைகளை விசாரித்த கணபதியாப்பிள்ளை ஆணையம் தலித்துகளின் மீதான சாதிக்கொடுமைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளையும்,சொத்துக்களையும் சேதப்படுத்திய காவல்துறையின் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கோமதிநாயகம் ஆணையம் காவல்துறையினர் அத்துமீறி நடக்கவில்லை என அப்பட்டமாக பொய் சொன்னது.மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்களைக் கொன்று போட்ட காவல்துறையினரைப்பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் விசாரணை ஆணையம் பேரணியில் வந்த தொழிலாளர்கள் மீதுதான் குற்றம் சுமத்தியது.தற்போது பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சம்பத் விசாரணை ஆணையம் மட்டும் உண்மையை தோலுரித்துக் காட்டப்போகிறதா என்ன?
   இன்றைய செய்தித்தாளைப் புரட்டுகிறேன்.நகைச்சுவையான ஒரு செய்தி என் கண்ணில் பட்டது."பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லையென்றால்,பல நூறு அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் வன்முறையாளர்களால் பறிக்கப்பட்டிருக்கும்".தென்மண்டல ஐ.ஜி. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதிலிருந்து எனக்கு சட்டெனப் புரிந்தது யார் வன்முறையாளர்கள் என்று?!
                         -------------------
-அம்ருதா,டிசம்பர்,2011



      
  













Thursday 1 December 2011

தமிழ்ச் சொத்து

திருக்குறள்

   ஆத்திசூடி
திருவாசகம்   திருமந்திரம் 

                                              நாலாயிர திவ்ய பிரபந்தம் / சிறிய திருமுறை

நளவெண்பா

விவிலியம் /புதிய ஏற்பாடு      கார் நாற்பது

சீறாப்புராணம் காண்டம்-1 

முல்லைத்திணை

     புதுமைப்பித்தன் படைப்புகள் - சிறுகதைகள், தொகுப்பு


     அப்பப்பா!! தமிழ்க் கடலின் கரையோரத்தில் நின்றுகொண்டு  இன்னமும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்







                                               

Sunday 13 November 2011

கேள்வியாகும் நெய்தல் வாழ்க்கை

   இப்போது நீங்கள் வாசிக்கப்போகும் இந்தக்கட்டுரை இந்த வருடம்(2011)பிப்ரவரியில் எழுதப்பட்டது.ஆனால் இன்றும் இது பொருந்தும்.யார் கண்டது?தமிழனின் தலைவிதிப்படி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் கூட இது  பொருந்தலாம்!!

                                            
                                  
                மீண்டும் இரண்டு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கும் விவசாயிகளைப் போல தங்களின் வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடமும், அன்னிய நாட்டிடமும் இழந்து வரும் தமிழக மீனவர்கள் தங்களது பூர்வீக நிலமான கடலிலிருந்தும் பிடுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புலிகளுக்கு உதவுகிறார்கள், போதைப்பொருட்கள் கடத்துகிறார்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் கடந்த காலங்களில் மீனவர்கள் அனுபவித்தக் கொடுமைகள் இன்னமும் அப்படியே தொடருகின்றன. இருபது கடல் மைல்களும், அதற்கும் குறைவாகவும் இடைவெளியுள்ள தமிழகம் மற்றும் இலங்கையின் கடற்கரைகளில் மீனவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களில். உலகின் மீன் வளம் மிகுந்து காணப்படும் பகுதிகளில் ஒன்றான பாக்சலசந்தி, மன்னார் வளைகுடாவில் பெருவாரியான மீன் வளம் பெரும் முதலாளிகளின் மீன்பிடி டிராலர்களால் ஏற்கனவே மிக மோசமாக சுரண்டப்பட்டுவிட்ட நிலையில் எல்லைக்குள்ளாக மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே செய்யும். தமிழக, இலங்கை மீனவர்கள் கடல் எல்லைகளைப் பார்ப்பதில்லை. கடல் எல்லைகளை தேசங்கள் தங்கள் சுய நலன்களுக்காக ஏற்படுத்திக்கொண்டவை. இன்னும் சிறிது காலத்தில் சந்திரனிலும், செவ்வாயிலும் கூட வேலி போட்டு வளங்களை சுரண்டப்போகும் நாடுகள்தான் இப்புவியின் தேசங்கள். இத்தேசங்களை ஆள்வோரின் சுயநலத்தாலும், சூழ்ச்சியாலும்தான் எல்லைக்கோடுகள் உருவாக்கப்படுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன. அவ்வாறு வரையப்படும் எல்லைக்கோடுகள் எதிர்காலத்தில்  எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்க்கையை நாசம் செய்யப்போகின்றன என்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்க முடியும்? எல்லைக்கோடு பாராமல் மீன்பிடி தொழில் செய்த தமிழக, இலங்கை தமிழ் மீனவர்கள் மீன் வளத்தை மட்டுமல்லாமல் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றை வளர்த்தார்கள். வளமான தமிழ் கலாச்சாரம் தமிழ் நிலத்திலும், இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் செழித்தோங்கியது.

                தமிழகத்தின் மீது மட்டுமல்ல, இந்தியாவின் மீதும் இலங்கைக்கு எப்போதுமே சந்தேகக் கண்தான். ஆத்மார்த்தமான நட்புறவு அல்ல அது. இலங்கையின் வரலாற்றுப் போக்கில் பல முக்கியமான, ஆபத்தான தருணங்களில் அதன் இறையாண்மை காக்க இந்தியா உதவியுள்ளது. 1971-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தீவிர இடது சாரிகளால் அந்நாட்டிற்கு அச்சுறுத்தல் எழுந்த போது அந்நாட்டின் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக எழுப்பிய அபயக் குரலுக்கு ஓடோடிச்சென்று உதவியது இந்தியா. சில இராணுவ ஹெலிகாப்டர்களையும், கடற்படைக் கப்பல்கள் சிலவற்றையும் கூட அங்கு அனுப்பியது. 55 மில்லியன் டாலர் அளவுக்கு இராணுவ உதவிகளை இந்தியா செய்ததாக அன்றைய நாளேடுகள் மதிப்பிட்டன. சீனாவும் இராணுவ உதவிகளை செய்தது. ஆனாலும் இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தை சந்தேகத்தோடு நோக்கியது இலங்கை. உடனே இலங்கையை மகிழ்விப்பதற்காக, குளிர்விப்பதற்காக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங்கை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா.  

                பாகிஸ்தானோடு நடைபெற்ற போரின் போதும் வங்காளதேசம் என்ற நாடு உருவாக்கப்பட்ட விதம் குறித்து இலங்கை திருப்தியடையவில்லை. வங்கதேச விவகாரம்  இந்தியாவால் உருவாக்கப்பட்ட தேவையற்ற ஒரு சர்ச்சை எனக் கருதிய இலங்கை, அப்போரினால் ஏற்பட்ட மனிதகுல இடப்பெயர்வும், அதனையயாட்டி இந்தியாவிற்கு             ஏற்பட்ட இன்னல்களும் சர்வதேச சமூகத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயயாழிய தனியயாரு நாடால் (இந்தியாவால்) அல்ல என்றும் கருதியது. அதனால்தான் கிழக்கு வங்காளத்திலிருந்து அன்னியத் துருப்புகள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்று .நா.அவை தீர்மானம் கொணர்ந்த போது அதை இலங்கை ஆதரித்தது. 1972 மார்ச் மாதம் வரை வங்காளதேசத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

                இத்தகைய ஒரு நல்லெண்ணமற்ற உறவுகளுக்கு இடையில்தான் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்ட இந்தியா ஏராளமான பொருளுதவிகளையும் செய்தது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் பற்பல தொழிற்சாலைகளை அங்கு நிறுவுவதிலும் இந்தியா உதவியது. அதாவது  நண்பேன்டா! நான்தான் உன் நண்பேன்டாஎன்று இந்தியா நடந்து கொண்ட விதம் நமக்கு சிரிப்பை மட்டுமல்ல, வேதனையையும் வரவழைக்கும். நமது அண்டை நாடுகளில் இலங்கை தவிர மற்ற எந்த நாடும் இவ்வளவு உரிமைகளை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் சர்வதேசக் கடல் வணிகப்பாதையில் இலங்கை கேந்திரமான இடத்தில் அமைந்திருப்பதாலும், சீனாவிடமிருந்து அது பெற்றுள்ள அபரிதமான கவனத்தினாலும்தான்.

               
                1948-ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை இலங்கை பறித்தபோது இந்தியா நடந்து கொண்ட விதம் இலங்கைக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது. தமிழர்களை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்தான் 2009-ல் நடந்த மிகப்பெரும் தமிழினப்படுகொலைகள். 10 லட்சம் மலையகத் தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிய இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவில்லை. அடிமை வணிகத்தின் போது கப்பல் கப்பலாக ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து நீக்ரோக்களை அமெரிக்கா கொண்டு சென்று அந்த நாட்டை நிர்மாணித்த பிறகு கருப்பர்களை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கே திருப்பி அனுப்புவது போன்றதுதான் இக்குடியுரிமை ரத்து. கங்காணிகளால் ஆடு, மாடுகள் கிடைக்கு அழைத்துச் செல்வதுபோல அழைத்துச் செல்லப்பட்ட திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்ட மக்கள்தானே மலையகத் தமிழர்களும் அவர்களது சந்ததிகளும். “கண்டிச்சீமைஎன ஆசை வார்த்தை காட்டி 1823 முதல் தொடங்கி 1939 வரை நீடித்த இந்த அடிமைக் குடியேற்றத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கண்டிக்காடுகளில் அட்டைப்பூச்சி கடிக்கும், மலேரியாவுக்கும், பட்டினிக்கும் உயிரை விட்டிருப்பார்கள். புதுமைப்பித்தனின் துன்பக்கேணியை வாசித்தால் அதன் ரணம் நமக்குப் புரியும். இலங்கை நாட்டை நிர்மாணிக்கும் போதும், தேயிலைத் தொழிலை வளர்த்து அந்நாட்டின் பொருளாதாரத்தை சிறக்கச் செய்த போதும் உயிர்நீத்த பல்லாயிரம் தமிழர்களின் உயிரை யாரடா தருவது என இலங்கை அரசைப் பார்த்து கேட்காமல், குடியுரிமை ரத்தை மெளனமாக வேடிக்கைப் பார்த்தது இந்தியாவின் மத்திய அரசு. தமிழ்நாட்டின் மாநில அரசு அவ்வப்போது முக்கி முனங்கியது, தற்போது செய்து கொண்டிருப்பது போல.      
       இந்திய -  சீனப்போரின் போதும், அதன் பிறகும் தனிமைப்பட்டுப் போயிருந்த இந்தியாவிடம் நண்பனைப் போல நடித்த இலங்கை 1964-ல் சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தத்தை இந்தியாவின் மீது திணித்தது.ஏறத்தாள ஆறு இலட்சம் மலையகத் தமிழர்களை,  அவர்களது குடும்பங்களைப் பிரித்து இந்தியாவிற்கு மூட்டைக் கட்டியது. இச்சம்பவங்களின் மூலம் இந்தியாவின் விவேகமின்மையை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருந்தது இலங்கை. எனவேதான் இந்த நிமிடம் வரை இலங்கை இந்தியாவிடம் செலுத்தும் நட்பு வெறும் காகிதப்பூப்போல அலங்காரமாய் காட்சித்தருகிறது.   மன்மோகன்சிங்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவும், நிருபமாராவும், சிவசங்கர் மேனோனும் அப்பூவைக் கண்டு வியந்து, வியந்து அதிசயிக்கிறார்கள்.

                இக்காகிதப்பூ எப்படி உருவானது என்று பார்ப்பதற்கு முன்னால் கச்சத்தீவு விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஆரம்பக் காலங்களில் எப்படி அமைந்தது என்று பார்ப்போம். பாக் நீரிணையில் அமைந்திருக்கும் கச்சத்தீவு இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தெற்கேயும், ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் அமைந்துள்ள, 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறுதீவு. தமிழக மீனவர்கள் அங்கே அடிக்கடி செல்வது வழக்கம். தங்கள் வலைகளை உலர்த்தவும், மீன்களைக் காயவைக்கவும் அவர்கள் இத்தீவைப் பயன்படுத்தி வந்தார்கள். புனித அந்தோணியார் தேவாலயம் என்ற கத்தோலிக்க தேவாலயம் அங்கே இருக்கிறது. தங்களைப் புயலிலிருந்தும், கடல் கொந்தளிப்பிலிருந்தும் புனித அந்தோணியார் காப்பதாக மீனவர்கள் நம்புகிறார்கள். இந்த தேவாலயத்தை 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவரான சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் நேர்ந்துகொண்டு கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் இத்தேவாலயத்தில் நடக்கும் ஒரு வார கால திருவிழா காலத்தில் ராமேஸ் வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்திலிருந்து ஒரு கத்தோலிக்க பாதிரியார் இங்கு வந்து பூசை வைப்பார் என்கிறது இராமநாதபுரம் கெஜட்டியார்.

                கச்சத்தீவு இராமநாதபுரம் ராஜாவின் ஜமீனின் ஒரு பகுதியாக 1880 முதல் 1949 செப்டம்பர் 7 வரை, அதாவது ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படுவது வரை இருந்தது. ராஜா அந்தத் தீவைக் கட்டுப்படுத்தியதோடு, அதன் உரிமையாளராகவும் இருந்திருக்கிறார். அவருக்குக் கீழிருக்கும் ஜமீனுக்கு அவர் வழங்க வேண்டிய பெஷ்குஷ் (குத்தகைத் தொகை), இந்தத்தீவு அவருக்குச் சொந்தம் என்ற வகையிலேயே கணக்கிடப்பட்டது. இந்தத்தீவைச் சுற்றி மீன்பிடிக்கும் உரிமை, மேய்ச்சல் உரிமை, பிற காரியங்களுக்குப் பயன்படுத்தும்   உரிமை    ஆகியவற்றை அவர் குத்தகைக்கு விட்டிருந்தார். அது பற்றிய குறிப்புகள் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ளது. 1947 வரை அவர் வரி வசூலும்  செய்து வந்தார். அதற்குப்பிறகு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் படி இந்த ஜமீன் சென்னை மாகாணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

                1947 – 48-ல் இராமநாதபுரம் திவானாக இருந்த வி.பொன்னுச்சாமியின் பெயரில் கச்சத்தீவின் மீது மட்டும் ஒரு குத்தகை ஒப்பந்தத்தை செய்தார் முகமது மீரசா மரைக்காயர். இந்த ஒப்பந்தத்தில் ஒரு வரைபடம் இருக்கிறது. இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமான சங்குப்படுகை அந்த  வரைபடத்தில் இடம் பெற்றிருக்கிறது. கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்பதற்கு அசைக்க முடியாத    ஆதாரமாக   இந்த வரைபடம்திகழ்கிறது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாரதிய ஜனதாக்கட்சியின் முன்னாள் தலைவருமான ஜனாகிருஷ்ணமூர்த்தியும், இராமநாதபுரம் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான முகமதுஷெரீப்பும் கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்குத்தான் சொந்தம் என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறார்கள். கச்சத்தீவு இராமநாதபுரம் ராஜாவுக்கே சொந்தம் என்று சென்னை உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.


     ஜமீன்தாரி முறை இந்தியாவில் ஓழிக்கப்பட்ட பின்பு எப்படி ஜமீன்தாரிகள் அரசின் சொத்தானதோ அது போலவே கச்சத்தீவும் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு இந்திய அரசின் சொத்தானது. ஆனால் கொடிகார என்ற இலங்கை அறிஞர் தான் எழுதிய  “இந்திய-இலங்கை உறவுகள் என்னும் ஆய்வுக் கட்டுரையில் இரண்டாம் உலகப் போரின் போது சிலோன் அரசாங்கத்தின் கப்பல் படையின் சுடு இலக்காக கச்சத்தீவு இருந்தது எனக்குறிப்பிட்டு குட்டையை குழப்பினார். அதற்கான ஆதாரம் எதையும் அவர்   தரவில்லை. ஆனால் நம் பிரதமர் நேரு குழப்பியதோ அதை விட மோசம்.  “ஜமீன்தாரி முறை வேறு, இறையாண்மை வேறு. கச்சத்தீவைப் பொறுத்த வரை நாம் உண்மையான இறையாண்மையை அதன் மேல் செலுத்தவில்லை. அதாவது நேரு சொல்ல வந்த செய்தி இதுதான்:  “கச்சத்தீவு நமக்கு உரிமை இல்லை. ஒரு வேளை இந்தியாவிற்கு கச்சத்தீவின் மேல் இறையாண்மை இல்லாதிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்றும் உண்டு என்ற உண்மையை வரலாறுதான் நம் ஆட்சியாளர்களின் மேல் ஓங்கி அறைய வேண்டும்.

     1956 முதல் 1967 வரை இந்தியாவும், இலங்கையும் மாறி மாறி தங்களது கடல் எல்லைகளை விரிவுப்படுத்திக் கொண்ட  சம்பவங்களும் உண்டு. இரு நாடுகளின் ஒருதலைப் பட்சமான இம்முடிவுகள் என்றைக்குமே தீர்வை நோக்கி செல்லாது என்பது இரு நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும் எல்லைக்கோடு பிரச்சினைகள்தான் நம் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இனிப்பாயிற்றே.இந்த விளையாட்டு திகட்டிப்போய்தான் காகிதப்பூ உருவாக்க முனைந்தார் அன்னை இந்திரா.

     1973 ஏப்ரலில் இலங்கையில் மூன்று நாட்கள் பயணம் செய்தார் இந்திராகாந்தி அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக. காகிதப்பூ தயாரானது.  “கச்சத்தீவு என்பது ஒரு தீவே அல்ல. ஒரு பாறை மட்டும்தான் என்று நமது பிரதமர்  திருவாய் மலர்ந்தார். சிறிமாவோ 1974 ஜனவரியில் டெல்லிக்கு வந்தார். கடலெல்லை குறித்து  “மிகவும் திருப்திகரமான முன்னேற்ற‌ம் ” ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 1974 ஜூன் 26-ல் காகிதப்பூ முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டது. கச்சத்தீவு அன்றைய தினம்தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழக மீனவர்களும், மார்ச் மாதத்தில் நடைபெறும் அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்கு தமிழக பக்தர்களும் கச்சத்தீவு நோக்கி வரலாம், அதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை என்றும் ஒப்பந்தம் கூறியது. இதைச் சொல்லித்தான் தமிழகத்தின் வாயை மத்திய அரசு அடைத்தது. கச்சத்தீவுக்கும் மேற்காக ஒரு கடல் மைல் தொலைவில் புதிய எல்லைக்கோடு கடலில் உருவாக்கப்பட்டது.
  1975 ஜூன் 25-ல் இந்திரா அவசரகால நிலையைக் கொண்டு வந்தார். உற்ற தோழியைப் பின் தொடர்ந்தார் சிறிமாவோ. இலங்கையிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976 மார்ச் 24 அன்று கடலெல்லை பற்றி மற்றுமொரு ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது.  தங்கள் தங்கள் கடல் பகுதிகளில் நிபந்தனைகளற்ற, முழுமையான இறையாண்மையை இரு நாடுகளுக்கும் இவ்வொப்பந்தம் வழங்கியது. அதாவது கச்சத்தீவின் மீது முழு இறையாண்மையை இலங்கை பெற்றது. இப்படியாகத்தான் புதிய கடலெல்லை தமிழக மீனவர்களின் லெட்சுமணக்கோடாக மாறியது.
     தங்களின் உழைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் இருப்பை இலங்கை அரசும், மத்திய அரசும், தமிழக அரசும் கூடவே இயற்கையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.
     போருக்குப் பிந்தைய  சூழலில் இலங்கை நாடு இந்திய, சீன அரசுகளின் காலனியாக மாறிப்போனதுதான் மிச்சம். இலங்கைத் தீவை இந்திய, சீன கார்ப்பொரேட் கம்பெனிகள் கூறுபோட்டுக்கொள்ளத் தொடங்கிவிட்டன. புதுப்புது துறைமுகங்களை சீனா வடிவமைக்கிறது. இலங்கைக் கடற்பரப்பின் வலிமையான மீன் வளம் இலங்கை, சீன அரசின் கண்களை குருடாக்குகிறது. ஆழமான கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன் பிடிக்கும் நவீன ரகப் படகுகள் இலங்கை வசம் ஏராளம் உள்ளன. போரின் விளைவால் மிகவும் இரந்துப் போய்விட்ட  ஈழத்தமிழர்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடச்செய்ய மறுக்கும் இலங்கை அரசு ஏராளமான சீனர்களை மீன் பிடித்தொழிலில் இறக்கியுள்ளது. தங்களைத் தாக்க வரும் இலங்கைக் கடற்படை வீரர்களுடன் சீனர்களும் தென்படுகிறார்கள் எனக்கூறும் தமிழக மீனவர்களின் கூற்றை இங்கு கவனிக்க வேண்டும். நமக்கான ஒரே தீர்வு 1974, 1976- களில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தல் மட்டுமே. அதன் பின்னர் நமது மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படாதவாறு புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம். அப்புதிய ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மையின் கீழ் இருக்கும்.

     நேரு தன் மகள் கூறியது போல கச்சத்தீவு என்பது ஒரு பாறைதான் எனக்கருதி அதன் மீதான இறையாண்மை குறித்து கருத்துத் தெரிவித்திருக்கலாம். இந்தியாவின் பாதிப் பரப்புக்குப் பரந்திருந்த எல்லா ஜமீன்தாரிகளுக்கும் கச்சத்தீவு பற்றிய தனது கருத்தை நேரு ஒப்புக்கொள்வாரா?

     இந்திய ஆட்சியாளர்கள் இறையாண்மை குறித்துப் போடும் பல வேடங்களை நாம் பார்க்கலாம். ஸ்ரீநகரின் லால்செளக் சதுக்கத்தில் இந்தியக் கொடியை ஏற்ற முயன்ற இளைஞர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியபோது எதார்த்தமாக நடந்து கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், தனது நாட்டு  மீனவர்களை வேற்று நாட்டு கடற்படை ஒன்று கொன்று கொன்று போடும் போது தனது இறையாண்மை நிர்வாணப்படுத்தப்படுவதை உணராமல் மீண்டும் மீண்டும் அதையே எதார்த்தம் என்றும், நட்புறவு என்றும், ஒப்பந்தங்கள் மீறப்படக்கூடாது, மீனவர்கள் எல்லை மீறக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்களானால் நம் நாட்டை ஆள்வோருக்கு அடிப்படை அறப்பண்புகள் இல்லை என்றும், நீதி நெறிகள் தெரியாது என்றும் அர்த்தம். ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனங்களினால்தான் நமது கடலோர புஷ்பவனங்கள் ஒவ்வொரு மலரையும் பேடித்தனமாக இழந்து கொண்டிருக்கின்றன.
                            ---------------------------

-தீராநதி, மார்ச்,2011