ஒவ்வொரு உயிரினமும் அது இயங்குவதற்கான வட்டத்தை இயற்கையே தீர்மானித்துள்ளதற்கு ஏற்ப அந்த வட்டத்திற்குள் வேறு எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த உயிரினம் அமைதியாக இயங்குகின்றது.மனிதனுக்கும் இறைமை ஒரு பொது இலக்கை நிர்ணயித்திருக்கிறது.அதாவது தன்னை உயர்பண்பு கொண்டவனாக ஆக்கிக் கொள்வதோடு மானுடத்தையும் உயர்பண்பு நிலைக்கு உயர்த்துவதே அந்த இலக்கு.
ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முடிவை மனிதனிடமே இறைமை ஒப்படைத்திருக்கிறது.தன்னையும் உயர்த்தி சமுதாயத்தையும் உயர்த்துவதற்கு ஏற்ற அவரவருக்கான பணித்துறையை(PROFESSION)தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை இறைமை மனிதனுக்கு அளித்துள்ளது.
இயற்கையின் மற்றப் படைப்புகளோடு ஒப்பிடுகையில் இது மனிதனுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றச் சிறப்பு.அதே வேளையில் இச்சிறப்பு அவனை முற்றிலுமாக சிதைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.அவனது திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கவல்ல,மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கச் செய்துவிடும் சாத்தியத்தன்மையும் கொண்டதாக விளங்குகிறது.
ஒரு இளைஞன் தனது வாழ்வைத்துவங்கும் அந்த முக்கியக் கட்டத்தில் அவன் ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியம்.தனது வாழ்வின் அதிமுக்கியமான நடப்புகளை வாய்ப்புகளுக்கு இடமளிக்கும் தற்செயல் போக்கிற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு.அது தன்னளவில் மிக உயர்ந்த ஒன்றாகவே தென்படும்.பெரும்பாலான சமயங்களில் அது அவனது உள்ளார்ந்த திடநம்பிக்கையின் ஒப்புதலோடு இருக்குமாயின் அது உயர்ந்த ஒன்றே.ஏனெனில் நித்தியமற்ற மனிதனை இறைமை ஒருபோதும் முற்றிலுமாக வழிகாட்டுதலின்றி தனித்து விட்டுவிடுவது கிடையாது.இறைமை பேசுகிறது.மென்மையாக.ஆனால் உறுதியாக.
ஆனால் இந்தக்குரல் சுலபமாக மூழ்கடிக்கப்பட்டுவிடலாம்.எதை நம் ஆத்மார்த்த தூண்டுதல் என்று கண்டோமோ அது அந்த தருணத்தின் தற்காலிக உருவாக்கமாகவும் இருக்கக்கூடும்.எது ஒரு தருணத்தின் தற்காலிக உருவாக்கமோ அதை மற்றொரு தருணம் சிதைக்கவும் கூடும்.
நமது கற்பனைப்பொறி நெருப்பிடப்பட்டு உணர்வுகள் சிலிர்த்தெழுந்து நம் கண்முன் மாயத்தோற்றங்கள் நிழலாட நம்முடைய கட்டுக்கடங்காத உணர்ச்சித்தூண்டுதல் எதைப் பரிந்துரைக்கிறதோ அதனுள் கண்மூடித்தனமாகக் குதித்து விடுகிறோம்.அதைத்தான் இறைமை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது என்றும் கற்பனை செய்து கொண்டுவிடுகிறோம்.ஆனால் எதை நாம் ஆர்வமிகுதியால் தழுவிக்கொண்டோமோ அது நம்மை விரைவிலேயே ஒதுக்கித்தள்ள நேரும்போது நம்முடைய இருத்தலே கேள்விக்குள்ளாகிறது.
எனவே நம்முடைய பணியை தேர்ந்தெடுப்பதில் உண்மையாகவே ஆத்மார்த்த தூண்டுதல் நம்முள் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நாம் கவனமாக ஆய்வு செய்திடல் வேண்டும்.அதை நம் உட்குரல் அங்கீகரித்திருக்கிறதா அல்லது எதை நம் ஆத்மார்த்த தூண்டுதல் என்று கொள்கிறோமோ அது வெறும் கற்பிதமா,எதை நமக்கு இறைவன் விடுத்த அழைப்பு என்று கருதுகிறோமோ அது வெறும் சுய ஏமாற்றமா என்பதை நாம் ஆராய்ந்துணரவேண்டும்.
- இன்னும் வரும்
('Reflections of a Youngman on the Choice of a Profession' என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்ப்பு - டாக்டர் ச.மருதுதுரை,கோ.வெங்கடாசலபதி)
No comments:
Post a Comment