Sunday, 29 January 2012
Saturday, 21 January 2012
Thursday, 19 January 2012
பணித்துறைத் தெரிவில் ஒரு இளைஞனின் ஆழ்ந்த சிந்தனை-3
நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பு இல்லாமல் மகிழ்ச்சியோடு அதிகநேரம் உழைக்க முடியவில்லை என்றாலும் கடமைக்காக நம்முடைய நலனை தியாகம் செய்கிற எண்ணமும் பலவீனமாக இருந்தபோது தீவிரமாக செயல்படவேண்டும் என்கிற முனைப்பும் அவ்வப்போது நம்முள் எழும்.
நாம் தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ற ஆற்றல் நம்மிடம் இல்லாதிருக்குமேயானால் நம்மால் அப்பணியை பயனுள்ள வகையில் செயல்படுத்தமுடியாமல் போகும்.அப்போது நம் இயலாமையை உணர்ந்து நாம் வெட்கி நமக்கு இட்ட பணியை நிறைவேற்ற இயலாத பயனற்ற ஜடநிலை சமூக அங்கத்தினன் என நம்மை நாமே சொல்லிக்கொள்ள ஆட்படுவோம்.அதன் இயல்பான விளைவாக நேரிடுவது சுயஅவமதிப்பு(SELF-CONTEMPT)ஆகும்.சுயஅவமதிப்பை விட அதிக வலிமைமிக்க உணர்வு வேறு எதுவாக இருக்க முடியும்?முழு உலகம் எது கொடுத்தாலும் சுயஅவமதிப்பை சரிசெய்து விட இயலாது.
சுயஅவமதிப்பு ஒரு மனிதனின் இதயத்துக்குள் குடிபுகுந்து சதா தீண்டிக்கொண்டேயிருக்கும் ஒரு நச்சுப்பாம்பு.அது அவனது உயிரோட்டத்தை உறிந்து அதனை விரக்தி,மனித இனவெறுப்பு எனும் விஷத்தோடு கலக்கச் செய்கிறது.
தீர ஆராயப்பட்ட ஓர் குறிப்பிட்ட பணிக்கான ஆற்றலைக் குறித்த சுயகற்பிதங்கள் நாம் செய்கிற மிகப்பெரிய தவறு.அது நம்மீது பழிதீர்த்துக் கொள்கின்றது.அது முழு உலகின் கண்டனத்தைச் சந்திக்காத போதிலும் அப்படிப்பட்ட கண்டனம் தரக்கூடிய வலியைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான வலியை உண்டாக்குகிறது.
இவை எல்லாவற்றையும் ஆராய்ந்தபின்பு நம்முடைய வாழ்க்கை நிலை நாம் விரும்புகிற ஒரு பணியை நாம் தேர்ந்தெடுக்கலாம்.அதானது நாம் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒரு பணிக்குரிய சத்தியக்கருவை ஆதாரமாகக் கொண்டது.அது மனிதகுலத்திற்குக் கடமையாற்றுகிற அகன்ற வாய்ப்பை வழங்கக்கூடியது.மேலும் அது எல்லாத் தொழில்களும் தங்கள் பொது இலக்காகக் கொண்டுள்ள பூரணத்துவத்திற்கு நம்மை அருகே அழைத்துச்செல்ல வல்லதாக அமைகிறது.
ஒருமனிதனை வேறெதைக்காட்டிலும் மிகவும் உயர்த்தவல்ல உணர்வு மதிப்புணர்வு(FEELING OF WORTH).அது அவனது செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் உன்னதத்தை ஊட்டுகிறது.அவனை பலவீனமற்றவனாக மாற்றுகிறது.ஜனத்திரளிலிருந்து அவனை உயர்த்தி அக்கூட்டத்தாலேயே பாராட்டச் செய்கிறது.அடிமைத்தனமின்றி எப்பணி சுதந்திரமாக நம்மை நம் எல்லைக்குள் செயல்படச் செய்கிறதோ அதுவே மதிப்புணர்வை உறுதியளிக்கும் பணியாகும்.
நிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காத தொழிலே இந்த மதிப்புணர்வை உறுதி செய்யமுடியும்.வெளிப்பார்வைக்குக் கூட நிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காத தொழிலை மட்டுமே உன்னதப் பெருமிதத்தோடு பின்பற்ற இயலும்.இதை வெகுவாக சாத்தியப்படுத்தும் தொழிலே நாம் தேர்ந்தெடுக்க ஏதுவான ஒன்று.
மதிப்புணர்வை சாத்தியப்படுத்தாத ஒரு பணி எப்படி நம்மை சிதைத்துவிடுமோ ஒரு பணியின் ஒப்புக்கொள்ளப்பட்ட சத்தியத்தன்மை பின்னாளில் பொய்யென உணரப்படும் நிலை ஏற்படும்போது அதன் வலி தாளாமல் நாம் நொறுங்கிப்போய் விடுவதற்கான வாய்ப்பிருப்பதும் நிச்சயமே.அப்போது நமக்கு புகழிடமாக மிஞ்சுவது சுய ஏமாற்றம்(SELF DECEPTION)மட்டுமே.நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதற்கான செயலால் நமக்குக் கிடைத்த பரிதாபமான முடிவு.
திடப்படாத கொள்கைகள்,ஸ்திரப்படாத நம்பிக்கைகள் கொண்ட இளைஞனுக்கு யதார்த்த வாழ்வியலோடு பொருந்தாத விழுமியம் சார்ந்த(VALUE BASED)பணிகள் பெரும் அச்சுறுத்தலான பணிகளாகவே அமையும்.அதே வேளையில் அப்பணி நமது இதயத்தில் ஆழமான வேர்விட்டு நமது வாழ்க்கையையும் நம்முடைய முயற்சிகளையும் அந்தப் பணியில் வாழுகின்ற சத்தியத்திற்காக தியாகம் செய்ய முடியுமானால் அதைவிட உன்னதமான பணி வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்தப் பணிக்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உள்ளுணர்வோடு நம்புகிற மனிதனுக்கு அந்தப் பணி மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.
மாறாக எவனொருவன் அவசரகதியில் எண்ணிப்பார்க்காது அந்தத்தருணத்தின் உந்துதலுக்கு ஆட்பட்டு தொழிலைத் தேர்ந்தெடுக்கிறானோ அவனை அத்தொழிலே அழித்துவிடுகிறது.
ஒரு பணி எந்தக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறதோ அவற்றின் மீது மாறாத மதிப்பு கொண்டிருப்பவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள்.அவர்களது மதிப்பு உயர்வதோடு மட்டுமின்றி அவர்களது செயல்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையான வழிகாட்டியாக இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் நல்வாழ்வும் தனிமனித பரிபூரணத்துவ முமே(PERFECTION).இவை இரண்டும் ஒருபோதும் எதிரெதிரானவை அல்ல.ஒன்றை அழித்துதான் மற்றது வெளிப்படவேண்டும் என்றில்லை.மாறாக சகமனிதனின் நலனுக்கும் முழுமைக்கும் உழைப்பதன் மூலமாகவே தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும்படியாகவே மனித இயல்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மனிதகுலத்திற்காக அல்லாமல் தனக்காக மட்டுமே ஒருவன் உழைக்கிறான் என்றால் அவன் கற்றறிந்த அறிஞனாக,மாமுனியாக,பெருங்கவிஞனாக ஆகலாம்.ஆனால் அவன் ஒருபோதும் முழுமையான உண்மையான மனிதனாக முடியாது.
பொதுநலனுக்காக உழைப்பதன்மூலம் தன்னை உந்நதப்படுத்திக் கொண்டவர்களையே வரலாறு உயர்ந்தவர்கள் என்று அழைக்கிறது.
எவனொருவன் அதிகமான மக்களை மகிழ்வித்திருக்கிறானோ அவனையே மகிழ்ச்சியான மனிதன் என வாழ்க்கை பதிவு செய்திருக்கிறது.
மனிதகுலத்திற்காக தன்னை தியாகம் செய்துகொண்ட மனிதனையே உலகம் பின்பற்ற விரும்பும் இலட்சிய மனிதன் என மதங்களும் நமக்கு போதிக்கின்றன.இதைப் பொய்யெனச் சொல்ல எவர் துணிவர்?
மனிதகுலத்திற்குப் பணியாற்றுகிற வாய்ப்பை நல்கும் பணியை நாம் மேற்கொண்டுவிட்டோமேயானால் எந்தச்சுமையும் நம்மை அழுத்த முடியாது.ஏனென்றால் அவை எல்லோருடைய நலனுக்காகவும் செய்கின்ற தியாகம்.
அப்போது நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சி சிறுமையானதாக,எல்லைக்குட்பட்டதாக,சுயநலம் கொண்டதாக இருக்காது.ஆனால் நம்முடைய மகிழ்ச்சியானது கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமாக இருக்கும்.
நம்முடைய செயல்கள் அமைதியாக அதே நேரத்தில் தொடர்ச்சியாக நம்முடைய பணியில் பரிமளிக்கும்.
நம்முடைய சாம்பலை உந்நத மனிதர்களின் கண்ணீர் ஈரமாக்கும்.
---------------------
('Reflections of a Youngman on the Choice of a Profession' என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்ப்பு - டாக்டர் ச.மருதுதுரை,கோ.வெங்கடாசலபதி)
நிலவொளி காலாண்டிதழ்,ஏப்ரல்,2003-ல் வெளிவந்தது.
Subscribe to:
Posts (Atom)